சாண்டில்யனின் படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது

கடல் புறா - முதல் பாகம்

http://kp1of1to37.blogspot.com/

சாண்டில்யனின் ‘கடல் புறா' - முகவுரை

(சென்னை பல்கலை கழக வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் என். சுப்ரமணியன், எம். ஏ.,. பிஎச்.டி., அளித்த கடல் புறாவிற்கான முகவுரை)
நெடுநாளாகக் `குமுத'த்தில் தொடர் கதையாக வெளிவந்து இப்பொழுது தனிவடிவில் வரும் `கடல் புறா' என்னும் இந்நூலுக்கு முகவுரையொன்று தரவேண்டுமென்று ஆசிரியர் `சாண்டில்யன்' என்னைக் கேட்ட பொழுது இத்தகைய பணிக்கும் எனக்கும் தொடர்பு இருக்க முடியுமா என்று என்னை நானே வினவிக் கொண்டேன். இரண்டு காரணங்களை முன்னிட்டு அத்தகைய தொடர்பில் தவறுமில்லை, அதற்க்கு தேவையுமுண்டு என்று கருதி இம்முகவுரையை எழுதுகிறேன். முதற்கண் வரலாற்று ஆராய்ச்சியை முழுநேரத் தொழிலாக ஏற்றுக்கொன்டுள்ள பல்கலைகழகப் பேராசிரியர்கள் வரலாற்றுப் புதினங்களுக்கு முகவுரை எழுதும் மரபு விரும்பதகாதது என்று அண்மையில் சிலர் கூறியுள்ள கருத்தை நான் ஒப்பவில்லை: அடுத்து நம் நாட்டு வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு நாம் இயற்ற புகும் நவீனங்கள், மேனாட்டில் எழும் அத்தகைய இலக்கியத்தினின்றும் வேறுபட்டிருக்கும் நிலையை வெளிப்படையாகவும் உறுதியாகவும் விளக்க வேண்டும் என்னும் அவா எனக்குச் சில காலமாக உண்டு. இந்நூலுக்கு முகவுரை வழங்குமுகத்தான் அதற்க்காண வாய்ப்பு எனக்கு கிடைத்தமைக்கு இந்நூலாசிரியரிடம் கடப்பாடுடையேன்.
வரலாற்று புதினங்களை ஆக்கும் முற்ச்சி மேனாடுகளில் பல நூற்றாண்டுப் பழமையுடையது; ஆயினும் தமிழ் இலக்கியத்திற்கு அது ஒரு புதுமை என்பதில் சிறிதும் ஐய்யமில்லை; இம்முயற்சி பெருமளவு, இலக்கியச் சுவையுடையோரால் போற்றப்பெருமளவு, வெற்றி கண்டுள்ளது என்பதும் என் கருத்து. தமிழ் மொழியில் இதுகாறும் வெளிவந்துள்ள வரலாற்று நவீனங்கள் பலவற்றுள்ளும் சிலவே நம் இலக்கியத்தில் நின்று நிலவும் தகுதியுடையவை என்றும், அச்சிலவற்றின் முண்ணனியில் நிற்கும் தகுதி `சாண்டில்யன்' அவர்களின் இலக்கியப் படைப்புகளுக்கு உண்டும் என்றும் நான் கருதுகிறேன். `கடல் புறா'வின் இலக்கியத் தகுதியைப் பற்றிய விரிவான ஆரய்ச்சி இம் முகவுரையில் வேண்டுவதின்று; ஏனெனில் அத்தகுதி தமிழர்கள் யாவராலும் ஒரு படித்தாகப் போற்றி ஒப்புக்கொள்ளப் பட்டது. என் கருத்தும் அதுவே என்று முதலிலேயே கூறி விடுகிறேன். இது தவிர, இந்நூல் எவ்வளவு தொலைவு வரலாற்றாளர்களால் உண்மையென்று அறுதியிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகலை யொட்டி அமைந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதையே சிறப்புப் பணியாகக் கொள்ள விரும்புகிறேன்.
மேலை நாடுகளில் வரலாற்று நவீனங்களை எழுதி மாபெரும் வெற்றி கண்ட பெருங்கலைஞர்களான சர் வால்டர் ஸ்காட், அலெக்ஸாந்திரே தியூமா, லியோ டால்ஸ்டாய் போன்றோர்க்கு எளிதில் கிடைத்த சாதன வாய்ப்பு நம் நாட்டு வரலாற்று புதினங்களை யாக்குவோர்க்குக் கிடையாமை வருந்தத்தக்க உண்மையாகும்.
இக்கூற்று சிறிது விளக்க வேண்டுவதாகும்.
வரலாற்று நவீனங்களை இயற்ற புகுவோர்க்கு இலக்கிய பயிற்ச்சி இருத்தலோடு பண்டை வரலாற்று நிலையைத் தம் அகக் கண்முன்னே கொணர்ந்து நிறுத்தி அச்சூழ்நிலையில் தமது கதையை அமைத்து, அவ்வமைப்பிற்கேற்ப கதயைப் புனைய வேண்டிய கட்டுப்பாடும் வேண்டும். வரலாற்றுச் சூழ்நிலையில்லாமல், மானிடப் பண்பைப் பொதுப்படையாகச் சமூகச் சூழ்நிலையில் வைத்து இல்லன புனையும் குறிக்கோள் ஒன்றினையே மேற்கொள்ளும் ஆசிரியர்களது படைப்புகள் வெறும் கதைகளாம். இத்தகைய கதைகளை எழுதுவோர்க்கு இலக்கிய பயிற்ச்சியும் கற்பனைத் திறனும் மட்டும் இருந்தால் போதும். இங்ஙனமின்றி, ஆசிரியரால் வரையறுக்கப்படாமல், தானே ஒரு வரையறைக்குட்பட்டு நிற்கும் வரலாற்றுச் சூழ்நிலையில் கதையை அமைத்துவிடும் ஆசிரயரது கற்பனை கட்டுக்கடங்காமல் திரிய முடியாது, வரலாற்றுக் கட்டுக்கு அடங்க வேண்டும். வரலாறு வரையறுக்காத இடங்களில் தமது கற்பனை திறனை காட்டலாமாயினும், இக்கற்பனைகள் வரலாற்று உண்மைகளோடு முரணாகாதவாறு அமைய வேண்டும். ஆதலால் வரலாற்றுக் கதைகளை எழுதுவோர்க்கு வெறுங் கதைகளை யாப்பவர்களைவிட இலக்கிய பொறுப்புணற்ச்சி மிகுதியாக இருத்தல் வேண்டும். ஈதிங்கினமாக, வரலாற்றுக் கதையை எழுதப்புகும் ஆசிரியர் தமது கதை எந்த நாட்டில் எந்தக் காலத்தில் அமைகிறதோ அந்த நாட்டு- அக்காலத்து வரலாற்றைச் செம்மையுறக் கற்று அக்கல்விக்குத் `தக நிற்றல் வேண்டும்'; அதாவது அசோகனை பற்றிய கதையொண்று இயற்றுவாரது நவீனத்தில் விவரிக்கப்பெறும் சமூகச் சூழ்நிலை குப்தர் காலத்து சூழ்நிலையாகவோ, சோழர் காலத்துச் சூழ்நிலையாகவோ இருத்தல் கூடாது; அன்றியும் ஆசிரியர் தம் காலத்துக் கருத்துகளையும் நிலையங்களையும் உணர்ச்சிகளையும் பண்டு ஒருகாலத்துக் கதையிற் புகுத்தக் கூடாது; அத்தகைய நூலில் வரும் கதாபாத்திரங்களின் நடை, உடை, பேச்சு, பாவனை, பிற செயல்கள் யாவையும் கதைக்கேற்ற காலத்தோடு பொருந்தியிருக்க வேண்டும். இப்பொருத்தங்களோடு முரணாகாத வகையில் பிற கற்பனைகள் அமைய வேண்டும். இஃதாயின், வரலாற்று நவீன ஆசிரியர்கள் கதையோடு தொடர்புடைய காலத்து அரசியல் வரலாற்றை மட்டும் அறிந்தார் போதாது. சமூக வரலாற்றின் பல பகுதிகளான கலை, இலக்கியம், பேச்சு, மரபு, நியாயம், உண்ர்ச்சி, அறிவு, ஆற்றல், இயல்பு என்பனவற்றை நன்கு உணர்ந்து கொண்டு அவற்றோடு சிறிதும் மாறுப்டாத வகையில் நூல் யாத்தல் வேண்டும். உதாரணமாக இராசராசன்-1ஐப் பற்றி வரலாற்றுக் கதை எழுதப்புகும் ஆசிரியர், அவரது சைவப்பற்று, கொடைத்திறன், கலையுணர்ச்சி, இலக்கிய ஆதரவு முதலிய பண்புகளோடு, சளுக்கர்களோடு அவர் புரிந்த போர்களில் அவர் மேற்கொண்ட இரக்கமற்ற செயல்களையும் எண்ண வேண்டும். விக்கிரமாதித்தன் என்று புகழ்ப்பெயர் படைத்த இரண்டாம் சந்திர குப்தனைப் பற்றி நூல் இயற்றப் புகுவார் வரலாறு நன்கறிந்துள்ள அவர்தம் பெருமைகளையேயன்றி, அவர் தம் அண்ணன் இறந்ததற்கு μரளவு காரணமாக இருந்ததோடு அவன் இறந்த பின் அவன் மனைவியையே மணந்துகொண்டு அவ்வாட்சியையும் (சுக்ரீவனைப்போல) கைப்பற்றிக் கொண்ட பண்பினையும் நினைவு கூற வேண்டும். இன்றேல் அவ்வாசிரியர் எழுதும் இலக்கியம் உண்மையோடு மாறுபடும்; மாறுபடின் அது வரலாற்று இலக்கியமாகாது.
இவ்வாறு வரலாற்று உண்மையோடு மாறுபடாமல் கதை எழுத வேண்டுமாயின் வரலாற்று உண்மை யாது என்பது முதற்கண் தெரிய வேண்டும். இங்ஙனம் தெரிதற்கு உதவுவனவே வரலாற்றுச் சான்றுகள் என்பன. அச்சான்றுகள் பொதுவாகக் கல்வெட்டுகள், பண்டைய கட்டட இடிகரைகள், நாணயங்கள், இலக்கியம், பிற நாட்டார் கூற்றுகள், கடிதங்கள், நாட்குறிப்புகள் எனப் பலவகைப் படுவனவாம். இவற்றில் வரலாற்றுக் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை நுண்மையாகப் புலப்படுத்தக் கூடிய அளவிற்க்குப் பயன்படக் கூடியவை அக்காலத்தே எழுதி
இடப்படும் வாழ்க்கைக் குறிப்புகள் போன்றவையேயாம். இத்தகைய சான்றுகள் மேனாடுகளில் பல உள. தூசிடிடிஸ்(Thocydides), செனபன்(Xenophon), சீசர்(Ceasar), டாசிடஸ்(Tacitus)என்னும் பண்டைய வரலாற்றாசிரியர்களும் ஆங்கிலோ-சாக்ஸன் கிரானிகில்(The Anglo Saxon Chronicle) போன்ற குறிப்புகளும் சான்றுகளாக அமைந்தமையாலேயே கிளாரண்டன்(Clarendon)முதல் கிப்பன்(Gibbon)* ஈறாகப் பல பிற்கால ஆசிரியர்கள் புகழ்பெற்ற வரலாற்று நூல்கலை இயற்ற முடிந்தது. இத்தகைய இலக்கியங்கள் நம் நாட்டில் இல்லாமையால், வரலாற்று** நவீனங்கள் இயற்றப்புகும் நம் ஆசிரியர்கள் நமது கதைகளில் பெரும்பாண்மை இடங்களில் வரலாற்றிற்கு எட்டாத (வரலாறு எட்ட மறுப்ப)தைக் கற்பனையைக் கொண்டு நிரப்ப வேண்டியிருக்கிறது. இது அவர்களால் தடுக்க முடியாதாயினும், இந்நிலைக்குட்பட்ட இலக்கியங்களை வரலாற்று நவீனங்கள் எனல் μரளவே பொருந்தும் என்பது வெளிப்படை. சில மன்னர்களின் பெயர்களும் ஊர்ப்பெயர்களும் மட்டுமே தெரிந்திருந்தால் அவற்றை வைத்துக்கொண்டு பிறவற்றையெல்லாம் கற்பனையால் நிரப்பும் கதைக்கு ஸ்காட்டின் `டாலிஸ்மன்', `ஐவன்ஹோ', லிட்டனின் `பாம்பேநகரத்தின் இறுதி நாள்கள்' போன்ற கதைகளுக்கும் உள்ள வேறுபாடு தெற்றன விளங்கும். அதாவது ரிச்சர்டு-Iஐப்பற்றி ஸ்காட் கூறும் உண்மைகளைப் போன்றவையல்ல, நரசிம்ம பல்லவனைப் பற்றி நம் வரலாற்று இலக்கிய கருத்தாக்கள் கூறுவன. இத்தகைய இலக்கியங்கள் இயற்றுவது குற்றம் என்பது என் கருத்தன்று; அவற்றை வரலாற்றுக் கதைகள் என்று குறிப்பிட வேண்டாம் என்பதே.
இனி, வரலாற்றுச் சான்றுகள் போதிய அளவில் கிடைக்காமையால் அக்குறைப்பாட்டைக் கற்பனைக் காட்சிகளால் நிறைவாக்கும்போது, அவற்றில் பெரும்பாலும் ஆசிரியர்களால் கதாநாயகன் என்று நிர்ணயித்துக் கொள்ளப்படுவோன் காப்பியத்தலைவனைப்போல அமைந்துவிடுவதே மரபாயிருந்து வருகிறது. ஆனால் பண்டைக்கால வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டு இயற்றப்பெரும் தற்கால வரலாற்றுக் கதைகள் இத்தகைய குறைபாடுகளின்றும் தப்ப வழியில்லை. அன்றியும் அண்மையில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று நவீனங்களிலும் இம்மரபு தொத்தி பரவுவதும் இயல்பாயுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவாங்கூரில் இருந்த வேலுத்தம்பியைப் பற்றி அண்மையில் வெளியான நூல்கள் புகுத்தும் புனை கதைகள் இவ்விரும்பத்தகாத இயல்பினை நன்கு விளக்குகின்றன. இதற்கு மேலும் எடுத்துக்காட்டுகள் வேண்டுவதின்று.
ஆகையால் நமது பண்டைய வரலாற்றை ஆதாரமாக கொண்டு இயற்றப்பெறுவதாகக் கூறிகொள்ளும் கதைகளைப் படிப்பவர்கள் அவற்றை வெறுங் கற்பனைக் கதைகளைப் படிப்பதாகவே நினைத்துக்கொண்டு படித்து மகிழ்ச்சியடைவதே நல்லது என்று தோன்றுகிறது.
இதுகாறும் கூறியவற்றைக் கொண்டு `கடல் புறா'வை ஆராயும்பொழுது மேற்கூறிய இயல்பான குறைபாட்டினின்று இந்நூல் தன்னை முற்றிலும் காத்துக்கொண்டு வரலாற்று உவமைகளுக்குச் சிறிதும் மாறுபடாதவாறு இயற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாகும்.
* உதாரணத்திற்காக இவர்களைக் கூறினும், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற பிற ஐரோப்பிய நாடுகளிலும் மிளிர்ந்த வரலாற்றாசிரியர்களையும் கொள்க.
** பாணனுடைய ஹர்ஷ சரிதம், பில்ஹணர் இயற்றிய விக்ரமாங்க தேவ சரிதம் ஆகிய நூல்களும் வரலாற்றுக் கதாசிரியர்களுக்குப் பயன்படும் அளவிற்குச் சமுதாயப் பண்பை விளக்குவனவாக அமையவில்லை. கல்ஹணர் இயற்றிய காஷ்மீர நாட்டு வரலாறான இராசதரங்கணி தென்னாட்டைப் பற்றியதில்லை. ஆதலால் தமிழ்நாட்டு வரலாற்றுக் கதை எழுதுவோர்க்கு அது பயன்படாது.
இனி இந்நூல் `இளைய பல்லவ'னான கருணாகரத் தொண்டைமானது(கற்பனை கலந்த) வரலாற்றை விவரிக்குமுகத்தான் குலோத்துங்க சோழனது `இளங்கோப் பருவ'த்தைப் பற்றியும் கதையிற் பிணைத்துக் கூறுகின்றது. கீழை சாளுக்கிய மன்னரான ராஜராஜ நரேந்திரரின் புதல்வரான ராஜேந்திரர்-ii (சாளுக்கியர்) என்னும் குலோத்துங்கர்-I (சோழ சாளுக்கியர்) கி.பி1063லிருந்து தாம் ஆட்சியெய்திய *1071வரை எங்கிருந்தார், எத்தகைய செயல்களில் ஈடுபட்டிருந்தார் என்னும் கேள்விகளுக்கு இதுகாறும் வரலாற்றாசிரியர்கள் பலவாறாக விடை கூறி வந்துள்ளனர். கீழை சாளுக்கிய ஏழாம் விஜயாதித்தரைச் சோழ மன்னரான வீர ராஜேந்திரர் ஆதரித்தமையால் வேங்கியில் அரசாள இயலாமற்போன குலோத்துங்கர் பஸ்தார் பிரதேசதில் வெற்றி காணும் முயற்சியில் தமது காலத்தை கழித்தார் என்று பேராசிரியர் க.அ.நீலகண்ட சாஸ்திரியார் உள்படப் பல அறிஞர்கள் கூறிவந்துள்ளனர். ஆனால் அவ்விடைக் காலத்தே இளங்கோவான `அபயன்' `பூர்வதேச'மான கீழை நாட்டில் ஸ்ரீ விஜயப் பேரரசோடு பொருது வெற்றி காண்பதில் முனைந்திருந்தமை பல சான்றுகளையும் காய்தல் உவத்தலின்றி ஆய்வோர்க்குப் புலனாம். `பூர்வதேசம்' என்ற கல்வெட்டுகள் குறிக்கும் இடம் பஸ்தார் பிரதேசமன்று, இந்தோ-சீன நாட்டுப் பகுதியான காந்தார நாடே என்று கொள்ளவேண்டிய நிலை இப்பொழுது ஏற்பட்டு உள்ளது. சீனரது வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டும் குலோத்துங்கன் கீழை நாடுகளில் இருந்தமை பெறப்படும். குலோத்துங்கர் என்னும் பெயரின் ஈற்றில் அமைந்து கிடக்கும் `உத்துங்கன்' என்னும் சேர்க்கை மாற விஜயோத்துங்கன், சங்கிராம விஜயோத்துங்கன் முதலிய ஸ்ரீ விஜயப் பட்டப்பெயர்களைப் பின்பற்றியதாம். குலோத்துங்கர் கடாரத்தை வென்றமை மறக்க முடியாத வரலாற்று உண்மையாகி விட்டது. இவ்வெற்றி 1071-க்கு முற்பட்டது. ஆதலால் `கடல் புறா' ஆசிரியர் தமது கதையில் அமைத்துக் கொண்டபடி ஸ்ரீ விஜயத்தை வென்றமைக்கு வரலாற்று ஆதாரம் முற்றிலும் உண்டு.
இனி `கடல் புறா'வைப் படிப்பவர்கள் இந்நூலைக் கொண்டு ஒரு கதையைப் படித்து இன்புறுவதோடு, ஆங்காங்கே ஆசிரியர் திறம்படப் புகுத்தியிருக்கும் அரிய கருத்துக்களையும் கண்டு பாராட்டுவர் என்பது ஒருதலை. இயற்கைக் காட்சிகளையும், மானிடப் பண்பினையும் ஒவ்வோரிடங்களில் மிகையுமின்றி குறையுமின்றி ஆசிரியர் கையாண்டுள்ள இலக்கிய மரபு போற்றத் தக்கதேயாம்; அன்றியும் அது ஆசிரியரது பரந்த ஆய்வுத் திறனைக் காட்டுகிறது. கருத்து எவ்வளவு கோவைப்பட அமைந்துள்ளதோ அவ்வளவு தெளிவாகவும், ஆற்றொழுக்காகவும் அமைந்துள்ளது ஆசிரியரது தமிழ்நடை. படிக்கப் படிக்கத் தெவிட்டாத சுவைமிக்க நூலாக அமைந்துள்ள கடல் புறவை யாவருமே படிதின்புறக்கூடும் என்பது இந்நூலின் முதல் சில பக்கங்களைப் படித்த உடனேயே விளக்கமாகும்.
இவ்வாறு வரலாற்று ஆதாரத்தைக் கொண்டும், அக்கால மரபிற்கும் பிற சமூகச் சூழ்நிலைகளுக்கும் முரணாகாதவாறும் கற்போற்க்குக் கற்கண்டெனச் சுவைக்கும் அழகிய வரலாற்றுப் புதினமொன்றைச் சாண்டில்யன் அவர்கள் தமிழகத்திற்குத் தந்துள்ளார். இந்நூலுக்குத் தமிழ்நூல் கற்போரின் உள்ளமார்ந்த ஆதரவு பெருமளவில் உண்டு என்று முன்பே நிரூபிக்கப்பட்டுவிட்டதாயினும் இத்தகைய இலக்கிய முயற்சிகளை ஊக்குவிக்கும் இந்நூலை விலை கொடுத்து வாங்கிப் படிக்கும் கட்டுப்பாடு தமிழ் மக்களுக்கு உண்டு. ஆசிரியரையும் அவர்தம் நூலையும் அறிமுகப்படுத்துவது எனது பணியன்று;
*கி.பி1071 மே மாதம் மூன்றாம் நாளை அதிராஜேந்திரரது சித்த மல்லிக் கல்வெட்டால்(கல்வெட்டு 5/1945-46) குலோத்துங்கன் 1071 மே மாதத்திற்கு முன்பு சோழப் பேரரசாட்சியைக் கைபற்றியிருக்க முடியாது என்பது உறுதியாகும்.
`சாண்டில்யன்' தமிழுலகம் அறிந்த பெயர். அவர் எனக்கு இட்ட பணி மூலம் என்னைத் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்த விரும்பினார் போலும். தமிழிலக்கியம் என்னும் பூங்காவில் இத்தகைய அரிய அழகிய மலர் மேலும் பூத்து நறுமணம் வீசத் தமிழ்த்தாய் அருள் புரிவாளாக.
-ந.சுப்பிரமணியன்

சாண்டில்யனின் கடல் புறா - பதிவு அறிமுகம்

தமிழ் வரலாற்றில் சரித்திரம் படைத்த நாவல்களில் மிக முக்கியமானவை கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனும், சாண்டில்யனின் ‘கடல் புறா'வும். இவைகளின் கதைநயம், கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் பாங்கு, வாசகர்களைத் தூண்டும் வண்ணம் திருப்புமுனைகள் என்று சொல்லிக் கொண்டே செல்லலாம். சிலர் கடல்புறாவை பொன்னியின் செல்வனை விட சிறந்த நாவல் என்றும், சிலர் இரண்டும் சிறந்த நாவல்கள் என்றும், மற்றும் சிலர் பொன்னியின் செல்வனின் கதையம்சம் 'கடல் புறா'வில் குறைவு என்றும் குறிப்பிடுகின்றனர். எது எப்படி இருந்தாலும் இவை இரண்டும் தமிழ் நாவல் உலகின் பொக்கிஷங்கள் என்பதில் இரு வேறு கருத்து கிடையாது.





பொன்னியின் செல்வன் இணையத்தில் இங்கு படிக்கக் கிடைக்கின்றது.




ஆனால் கடல் புறா என்ற அரிய பொக்கிஷம் இணையத்தில் கிடைக்கவில்லை. இதை இணையத்தில் கொண்டு வர வேண்டுமென்ற நோக்கில் சில நண்பர்களுடன் கலந்தாலோசித்த போது உருவானது தான் இந்த தளம். இதில் படிப்படியாக 'கடல் புறா' நாவலை கொண்டு வர வேண்டுமென்பது தான் நமது நோக்கம். பொது நலமான இந்த நோக்கத்திற்கு அனைவரும் ஒத்துழைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.







தன்னார்வ அடிப்படையில் ஸ்கேன் செய்யப்பட்ட 'கடல் புறா' நாவலை தட்டச்ச விரும்புபவர்கள் எங்களை அணுகவும். kadalpuraaonnet@gmail.com

கடல் புறா - முன்னுரை

இந்தியாவிலேயே இணையற்ற செல்வாக்கையும் செலாவணியையும் பெற்றுள்ள 'குமுதம்' பத்திரிக்கையில் தொடர்கதையாக வந்த 'கடல் புறா' முற்றுப் பெற்றதும் அப்பத்திரிகைக் காரியாலயத்திற்கு வந்த ஏராளமான கடிதங்களில் ஒன்றை எழுதியவர் அதைக் 'காவியப் புறா' என்று குறிப்பிட்டிருந்தார். ஓரு விஷயத்தில் அது உண்மை. ஓரு பெறும் காவியத்தின் அளவுக்கு நீண்டு விட்டது 'கடல் புறா'. மூன்று ஆண்டுகள் ஒரு வாரம் தொடர்ச்சியாக இக்கதை 'குமுத'த்தில் வெளிவந்தது. இக்கதையை எழுத ஆரம்பித்தபோது மூன்று வருடம் ஓட்டும் உத்தேசம் இல்லை எனக்கு. ஆசையும் அவசியமும் கதையை நீட்டிவிட்டது.

தமிழர்களைப்பற்றிய வரலாற்று ஆராச்சி நூல்களைப் படித்தபோதும், கல்வெட்டுக்களைப் பற்றிய ஏடுகளைப் புரட்டிய போதும், கடல் கடந்த தமிழர்களைப் பற்றிய குறிப்புகள் எம் மனத்தில் ஆழப் பதிந்தன. திரும்ப திரும்ப அவற்றில் காணப்பட்ட கடாரம் என்ற சொல்லைப் பற்றியே பல நாட்கள் சிந்தித்தேன். 'நல்ல யந்திர வசதியுள்ள இக்காலத்திலேயே கப்பல் பயணம் கஷ்டமாய் இருக்க, எந்த வசதியுமில்லாத காலத்தில் பழந்தமிழர்கள் எப்படிக் கடல் கடந்து சென்று வாணிபம் செய்தார்கள்? ராஜேந்திர சோழனும் மற்ற பிற்காலச் சோழர்களும் எங்கோ இருக்கும் கடாரத்துக்கு மரக்கலங்களைக் கொண்டு சென்று எப்படிப் போர் புரிந்தார்கள்?' என்ற கேள்விகளும் அடிக்கடி சிந்தனையில் எழுந்தன. ஆகவே அந்தக் காலத்துக் கடல் வாணிபம், கடல் போர் இவற்றைப் பற்றி ஆராயத் தொடங்கினேன்.

ஆராய்ச்சி சுலபமாயில்லை. தமிழில் கிடைத்த விஷயங்கள் சொற்பமாயிருந்தன. 'அந்தக் காலத்தில் எத்தகைய கப்பல்களைக் கட்டினார்கள்? எத்தனை விதக் கப்பல்களைக் கட்டினார்கள்? அவற்றின் உபயோகம் என்ன?' என்பதெற்கெல்லாம் பல ஆங்கில நூல்களையும் வடமொழி நூல்களையும் பார்க்க வேண்டியதாயிற்று. போஜன் எழுதிய 'யுக்தி கல்பதரு' என்ற மரக்கல அமைப்பு நூல்களைப் பற்றிய குறிப்புகளைப் பேராசிரியர் ராதா முகுத் முகர்ஜி தமது "இந்தியன் ஷிப்பிங்" என்ற நூலில் தந்திருக்கிறார். அந்தக் குறிப்புகள் மரக்கல அமைப்பைப் பற்றி எனக்கு பல சூட்சுமங்களை விளக்கின. பிறகு கடாரத்தின் சரித்திரம், சைலேந்திரர்களின் வமிசாவளி, அவர்கள் வரலாறு முதலியவற்றை டாக்டர் மஜும்தாரின் 'ஸ்வர்ணத்வீபம்' என்ற நூலிலிருந்தும், வீரராஜேந்திரன் காலத்தில் எற்பட்ட கடாரப் போரைப் பற்றிய சில குறிப்புகளை திரு. நீலகண்ட சாஸ்திரியார், டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார், திரு. பி.டி. ஸ்ரீநிவாச அய்யங்கார் இவர்கள் வரலாற்று நூல்களிலிருந்தும் எடுத்துக் கொண்டேன்.

மேற்கூறிய நூல்களிலிருந்து எனக்கு கிடைத்த தகவல்கள் வருமாறு:
"முதலாம் குலோத்துங்கனாக முடி சூடிய அநபாயன் கி.பி.1063-வது வருஷத்திலிருந்து 1070-ம் வருஷம் வரை ஸ்ரீவிஜய சாம்ராஜ்ய அரியணைக்கு நடந்த போட்டியைத் தீர்ப்பதிலும் அங்கு அமைதியை நிலைநிறுத்துவதிலும் ஈடுபட்டிருந்தான். 1077-வது வருஷத்தில் தமிழர் தூது கோஷ்டியொன்று சீனாவை அடைந்தது. அதன் தலைவன் பெயர் 'தேவகுலோ'. இந்த தேவகுலோ என்ற சொற்கள் குலோத்துங்கனைக் குறிக்கும். "

இந்தத் தகவல்களிலிருந்தும், ராஜேந்திர சோழனின் கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்தும், பழந்தமிழர்கள் கடல் கடந்து செல்வதும், அந்நாடுகளின் வாணிபத்தில் மட்டுமின்றிப் போர்களிலும் கலந்து கொள்வதும் சர்வ சகஜமாக இருந்ததென்பதை அறிந்தேன். ஆகவே அவர்கள் சென்ற கடல் மார்க்கங்கள், அவற்றுக்கு உதவிய மரக்கல வகைகள், போர் முறைகள், இவற்றைப் பற்றிய பல நூல்களைப் படித்தேன். அவற்றைப் படித்த பின்னர் ஏற்பட்ட வியப்பு அல்ப சொல்பமல்ல. தமிழர் பரம்பரை எத்தனை வீர பரம்பரை, எத்தனை நாகரிகம் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது, எத்தனை அபாயங்களைத் தமிழர்கள் சமாளித்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெளிவாகத் தெரிந்தன. இந்த அறிவையெல்லாம் எனது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அந்த ஆசையின் விளைவுதான் 'கடல் புறா'.

'கடல் புறா' கதையைப் புனைய என்னைத் தூண்டிய இலக்கியம் ஜயங்கொண்டாரின் 'கலிங்கத்துப் பரணி'. அதைப் படித்த போது கருணாகரத் தொண்டைமானின் வீரம் மட்டுமல்ல, அவன் கலிங்கத்தில் புரிந்த அட்டூழியங்களும் என் சிந்தனையைத் தூண்டின. என்னதான் போரிட்டாலும் பண்பாடு மிக்க தமிழ்ச் சமுதாயத்தைச் ஒரு தளபதி பயிர்களைக் கொளுத்துவதும், அழிவை எங்கும் விளைவிப்பதும் எப்படிச் சாத்தியம் என்று எண்ணிப் பார்த்தேன். அதை முன்னிட்டுக் கலிங்கத்தின் வரலாற்றையும், வீர ராஜேந்திரன் காலத்தில், தமிழ்-கலிங்க எல்லை விவகாரங்களைப் பற்றியும் ஆராந்தேன். பூசல் பலமாயிருந்தது. அநீதிகளும் சில இழைக்கப்பட்டிருக்கின்றன.பிற்காலத்தில் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தின் மீது இழைத்த கொடுமைக்கு அவை ஏன் காரணமாயிருக்கக் கூடாது என்று யோசித்தேன். அந்த யோசனையையும், குலோத்துங்கன் ஸ்ரீவிஜயப் பயணத்தையும் இணைத்துப் பார்த்ததில் 'கடல் புறா' பிறந்தது. 'கடல் புறா'வைக் 'கலிங்கத்துப் பரணி'யின் சம்பவங்களுக்கு அடிகோலும் நூல் என்று கொள்ளலாம்.

'கடல் புறா'வில் கற்பனையைப் பூர்ணமாக ஓட்டியிருக்கிறேன். சுவையான ஒரு கதையை வரலாற்றுக் குறிப்புகளுடன் நுழைத்துச் சலிப்பில்லாமல் மக்கள் படித்து மகிழச் செய்யப்பட்ட பெருமுயற்சியின் விளைவு 'கடல் புறா'. இதன் தரத்தைத் தமிழ் மக்களும் அறிஞர்களும் மதிப்பிடுவார்கள் ஆகையால் நான் மதிப்பிட முயலவில்லை. முயல்வதும் சரியாகாது. சமைத்த பதார்த்தத்தின் பெருமையைச் சமைத்தவனே விவரிப்பது ரசமல்ல. பண்பாடுமல்ல.

ஆனால் மதிப்பீடு செய்வது அத்தனை எளிதும் அல்ல. சிற்றறிவாளர்களும் பாரபட்சமுள்ளவர்களும் மதிப்பீட்டில் இறங்குவது எத்தனை அசம்பாவிதம் என்பதை சமீபத்தில் வெறொரு சந்தர்ப்பத்தில் கண்டேன். இலக்கிய மேதைகளென்று சொல்லிக் கொள்ளும் சிலர் 'சரித்திரக் கதைகள் இலக்கியமல்ல' என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் 'சரித்திரக் கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை' என்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இலக்கியம் எது என்பதிலுள்ள அறிவுக்குறைவென்பதை சாதாரண மக்கள் கூடப் புரிந்து கொள்வார்கள். 'சரித்திரம்' என்பது ஆகாயத்திலிருந்து குதித்துவிடவில்லையென்பதும், ஆதியில் வாழ்ந்த சமுதாயத்தைப் பற்றிய குறிப்புத் தொகுதிதான் என்பதையும் புரிந்து கொண்டால், 'சரித்திரக் கதைக்கும் சமூகக் கதைக்கும் உடைகளைத் தவிர அதிக வித்தியாசம் எதுவுமில்லை'யென்பது தெரிய வரும். அடிப்படை உணர்ச்சிகள், ஆசாபாசங்கள் எல்லாம் ஆதிகால முதல் மனிதனுக்கு ஒரே விதமாகத்தானிருக்கின்றன. சரித்திரக் கதைகளில் வீர காதல் ரசங்கள் காரணமாக அவை இலக்கியமல்லவென்றால் புராணங்களும், இதர பெருங் காவியங்களும் அடிபட்டுப் போகும். இராமாயணம், மகாபாரதம், தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்கள் எல்லாவற்றையுமே தள்ளி விடும்படியாக இருக்கும். ப்ளுடார்க், ஷேக்ஸ்பியர் போன்றவர்கள் காற்றில் பறந்து விடுவார்கள். இவர்களெல்லாம் போய் மீதி ஏதாவது நிற்க வேண்டுமென்றால், சாரமில்லாத, விரசமான கதை எழுதுவதல்லாமல் 'இதுதான் இலக்கியம்' என்று எழுதுபவர்களே சொல்லிக்கொள்ளும் கதைகள் தாம் மிஞ்சும். இந்த நிலை ஏற்பட வேண்டாம் என்று ஆண்டவனைப் பிரார்த்திப்போமா? தேவையில்லை. சரக்கில்லாத நூல் மக்களிடம் செலாவணியாவதில்லை. தமிழ் மக்கள் உறுதியுள்ளவர்கள். தகுந்தது எது, தகாதது எது என்பது அவர்களுக்கும் தெரியும்.

ஆகவே 'இலக்கியம் எது? இலக்கியம் அல்லாதது எது?' என்ற சர்ச்சை இப்பொழுது தேவையில்லை. பிற்காலத்தில் எது இலக்கியம் என்பது தீர்மாணிக்கப்படும். இப்பொழுது தேவைப்படுவது நூல்கள் பெருகத் துணை செய்யும் விமர்சனம். அப்படி விமர்சனம் செய்பவர்களும் தமிழ் நாட்டில் நாலைந்து பேர்கள் இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். ஆனால் நாம் ஒரு நூலை எழுதும்போது யாரைத் திருப்தி செய்யவும் எழுதக் கூடாது. நல்லதை எழுத வேண்டும். கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எழுத வேண்டும். நமது நூல்களைப் படிப்பவர்கள் அலுப்புத் தட்டாமால் படிக்கவும், படித்த பின்பு அவர்கள் எண்ணங்களும் அறிவும் உயரவும் விசாலப்படவும் எழுத வேண்டும். இந்த நோக்கங்களுடன் தான் நான் எழுதுகிறேன்.

இந்தக் கடல் புறா சம்பந்தமாக நான் படித்த வரலாற்று நூல்களின் பட்டியலைப் பின்னால் தந்தி ருக்கிறேன். அவற்றிலிருந்து நான் அறிந்த பல உண்மைகளை இந்த நவீனத்தின் ஊடே செலுத்தியிருக்கிறேன். உதாரணமாக 'கப்பல்களில் திசை காட்டும் கருவி நவீன காலத்தியது. வெள்ளையர் கண்டு பிடித்தது' என்று எண்ணுகிறோம். ஆனால் அதை சீனர் கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரத்து முன்னூறு வருஷங்களுக்கு முன்பே அறிந்திருந்தார்களென்ற குறிப்பு இருக்கிறது. இப்படி இன்னும் பல குறிப்புகள் இருக்கின்றன.

'யவனராணி' முடிந்து எட்டு மாத்ங்கள் கழித்துதான் 'கடல் புறா'வைக் 'குமுதத்'தில் துவக்கினேன். அந்த எட்டு மாத ஆராய்ச்சியின் பலனைக் 'கடல் புறா'வில் பார்க்கலாம். தவிர நல்லதொரு கதையையும் பார்க்கலாம். 'யவன ராணி'யைப் போல் 'கடல் புறா'வும் மக்களிடம் பேராதரவைப் பெற்றது. அதைத் தொடர் கதையாகப் பிரசுரித்த 'குமுதம்' ஆசிரியருக்கும், பிரசுரத்தாருக்கும் எனது நன்றி உரித்தாகும். அவர்களிருவரும் எனது நண்பர்கள். அவர்களைப்பற்றி அதிகப்படி எழுதுவது முறையாகாது. இருப்பினும் ஒன்று சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். இன்று நான் லக்ஷக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருக்கிறேனென்றால் அதற்குக் காரணம் 'குமுதம்' பத்திரிக்கையின் ஆசிரியர் திரு.எஸ்.ஏ.பி. அண்ணாமலையும் அதன் பிரசுரகர்த்தர் திரு.பி.வி. பார்த்தசாரதியும் பல வகைகளிலும் தொடர்ந்து எனக்களித்த ஆதரவுதான்.

'கடல் புறா'வுக்கு ஒரு முகவுரை தேவையென்று நினைத்ததும் என் நினைப்பில் வந்தவர் டாக்டர் என்.சுப்பிரமணியம், எம்.ஏ., பிஎச்.டி. அவர்கள் தான். டாக்டர் சுப்பிரயமணியம் அவர்கள் வரலாற்றில் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்தவர். சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர். முகவுரை எழுதித் தரவேண்டுமென்று கேட்டுக் கொண்டதும் 'பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் வரலாற்று நூல்களுக்கு முகவுரை எழுதுவது விரும்பத்தக்கதல்லவென்று சில எழுத்தாளர்கள் நினைக்கிறார்கள்' என்று கூறினார். 'ஒரு துறையில் சரியாக ஆராய்ச்சி செய்யாதவர்கள் அதைப் பற்றி அபிப்பிராயம் சொல்வதுதான் தவறு. விஷயந் தெரிந்தவர்கள் எழுதுவதுதான் விரும்பத்தக்கது. அப்பொழுதுதான் நல்ல இலக்கியம் வளரமுடியும். சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியரான உங்களைப் போன்றவர்கள்தான் வரலாற்றுப் புதினங்களின் குணதோஷங்களைச் சரியானபடி எடுத்துச் சொல்ல முடியும்' என்றேன். பிறகுதான் டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் முகவுரை தர இசைந்தார்கள். அப்பெரியாருக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். இதுவரை என் புத்தகங்களுக்கு நல்லறிஞர்களே முகவுரைகள் எழுதி இருக்கிறார்கள். தமிழகத்தின் இணையற்ற அரசியல் தலைவர் எஸ். சத்தியமூர்த்தி, பேராசியர் சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, பேராசிரியர் கே.வி.ரங்கஸ்வாமி ஐயங்கார், 'குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை ஆகியவர்கள் எழுதியிருக்கிறார்கள். இப்பொழுது பேராசிரியர் டாக்டர் என்.சுப்பிரமணியம், எம்.ஏ., பிஎச்.டி. எழுதியிருக்கிறார். இவர் எழுதித் தந்திருப்பது முகவுரை மட்டுமல்ல, வரலாற்றுப் புதினம் எழுதும் முறை பற்றி விளக்கும் சிறந்த கட்டுரையுங்கூட என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.

இம் முகவுரையை டாக்டர் என்.சுப்பிரமணியம், எம்.ஏ., பிஎச்.டி. குறுகிய காலத்தில் எழுதிக் கொடுத்தார். 'கடல் புறா'வின் மூன்று பாகங்களையும் மிக விரைவில் படித்து எனக்குத் துரிதமாக முகவுரையும் எழுதிக் கொடுத்ததற்கு நான் மட்டுமல்ல 'வானதி' உரிமையாளர் திரு.ஏ. திருநாவுக்கரசும் கடமைப்பட்டவர். இந்த நாற்பது ரூபாய் (இப்பொழுது ரூ.110) புத்தகத்துக்கு முன்னதாகவே வந்துவிட்ட ஆர்டர்களை நிறைவேற்ற சீக்கிரம் முகவுரை கிடைத்தது எத்தனை உதவி என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

'கடல் புறா' கதையை மக்கள் படித்தாகிவிட்டது. அவர்களை நான் கேட்டுக்கொள்ள வேண்டியது ஒன்றுதான். ஏத்தனையோ செலவழிக்கும் நீங்கள் 'கடல் புறா' புத்தகத்தையும் வாங்கி உங்கள் வீட்டில் வையுங்கள். அப்படிச் செய்வது எனக்கும் உதவி, பதிப்பாளருக்கும் உதவி. பிற்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கும் பயன் படும் என்று கூறிக் கொண்டு உங்கள் ஆதரவு என்றும் இருக்க வேன்டுமென்றும் வேண்டிக்கொண்டு என் முன்னுரையை முடித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ் மக்கள்!
--- சாண்டில்யன்

கடல் புறா - நூல் முகப்பு