சாண்டில்யனின் படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது

நாட்டுடமையாக்கப்பட்ட சாண்டில்யனின் படைப்புகள்

தமிழக அரசு சமீபத்தில் கண்ணதாசன், சுந்தரராமசாமி, சாண்டில்யன் உள்ளிட்டோரின் படைப்புகளை நாட்டுடமையாக்குவதாக அறிவித்துள்ளது.

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, மு.ராகவையங்கார், பம்மல் சம்பந்தனார், டாக்டர் மு.வரதராசனார், கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட 28 தமிழ்ச் சான்றோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டு, அவர்கள் மரபுரிமையர்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பு: இதுவரை 95 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளன.


இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா, கவியரசு கண்ணதாசன், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், மு.ராகவையங்கார், பம்மல் சம்பந்தனார், அ.சிதம்பரநாதன் செட்டியார், மு.சு.பூரணலிங்கம் பிள்ளை, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், பாலூர் கண்ணப்ப முதலியார், இராய.சொக்கலிங்கனார், டாக்டர் மு.வரதராசனார், முனைவர் ச.அகத்தியலிங்கம், பாவலர் நாரா.நாச்சியப்பன், புலியூர் கேசிகன், எழுத்தாளர் சாண்டில்யன், கோதை நாயகி, சின்ன அண்ணாமலை, பூவை எஸ்.ஆறுமுகம், என்.வி.கலைமணி, கவிஞர் முருகு சுந்தரம், புலைவர் த.கோவேந்தன், எழுத் தாளர் சுந்தர ராமசாமி, திருக்குறள் மணி நவநீத கிருஷ்ணன், லட்சுமி, வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜமதக்னி மற்றும் ஜே.ஆர்.ரங்கராஜு ஆகிய 28 தமிழ் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும். மேலும், அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்தம் மரபுரிமையர்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும்.

()

சுந்தர ராமசாமி நூல்கள் நாட்டுடைமை குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு

"எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளை நாட்டுடைமையாக்க அவரது குடும்பத்தினரின் அனுமதி பெறாமல் அறிவிப்பு வெளியிடுவது சட்டவிரோதமானது' என, காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.காலச்சுவடு பதிப்பக பதிப்பாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாக தமிழக அரசு இன்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. சுந்தர ராமசாமியின் படைப்புகளின் காப்புரிமையை அரசு பெறுவது பற்றி அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெறாமல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதி பெறாமல் அரசு அறிவிப்பது சட்ட விரோதமானது.சுந்தர ராமசாமியின் படைப்புகளை வெளியிடும் உரிமை தற்போது காலச்சுவடு பதிப்பகத்திற்கு மட்டுமே உள்ளது.


சட்டவிரோதமான அரசு அறிவிப்பின் அடிப்படையில் அவர் படைப்புகளை வெளியிட்டு காப்புரிமை சட்டத்தை மீற வேண்டாமென தமிழ் பதிப்பாளர்களை காலச்சுவடு பதிப்பகம் கேட்டுக்கொள்கிறது.அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழுக்கு பங்களித்து வந்த சுந்தர ராமசாமியை எந்த கட்டத்திலும் அங்கீகரிக்காத தமிழக அரசு இப்போது அவர் மறைந்து மூன்று ஆண்டுகளிலேயே அவசரமாக நாட்டுடைமையாக்கத்தை அனுமதி பெறாமல் அறிவித்திருப்பது அரசின் உள்நோக்கம் பற்றிய சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது.


"காலச்சுவடு' இதழுக்கு நூலகத்தில் தடை விதித்திருக்கும் தமிழக அரசு சுந்தர ராமசாமியின் காப்புரிமையை அபகரித்து "காலச்சுவடு' பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நோக்கத்துடனேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது.இவ்வாறு கண்ணன் கூறியுள்ளார்.


கண்ணதாசன் பதிப்பக நிர்வாகி காந்தி கண்ணதாசன் அறிக்கை:தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் 28 தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவது தொடர்பான பட்டியலில் கவிஞர் கண்ணதாசன் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. கண்ணதாசன் நூல்களை எக்காலத்திற்கும் நாட்டுடைமையாக்குவதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டது இல்லை; ஒப்புக்கொள்ளப் போவதும் இல்லை.


இந்த பட்டியலில் கண்ணதாசன் பெயர் சேர்ப்பது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை எங்கள் குடும்பத்தினரை கலந்து ஆலோசிக்காமல், குறைந்தபட்சம் அவரது குடும்பத்தினருக்கு கூட தெரிவிக்காமல் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.கண்ணதாசன் நூல்களை கண்ணதாசன் பதிப்பகமும், வானதி பதிப்பகமும் மிகக் குறைந்த விலையில் வெளியிட்டு மிகப் பரவலாக மக்களிடையே எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.


கண்ணதாசனின் குடும்பத்தினர் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டிய நிலையிலும் இல்லை. தமிழ் வளர்ச்சித் துறையின் இந்த தன்னிச்சையான போக்கு தமிழக அரசிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.கண்ணதாசன் புத்தகங்களை எங்களது சொத்தாக வைத்துப் பாதுகாத்து வருகிறோம். இதை தேசியமயமாக்கும் எண்ணம் துளியும் இல்லை. கண்ணதாசன் குடும்பத்தினருக்கு அவரது எழுத்துகளை பாதுகாப்பது எப்படி என்பது தெரியும்; காப்பற்றவும் எங்களால் முடியும். இது தொடர்பாக முதல்வரிடம் மனு அளிக்கவுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி்: தினமலர்

0 comments: